நாம் தமிழர் கட்சி தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ”தமிழகம் ஈரோட்டில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுக்கூட்டங்களில் பரப்புரையாற்றும்போது கடுமையான, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது திராவிட இயக்கத்தினுடைய ஒப்பற்ற தலைவராக விளங்கும் தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏளனமாகப் பேசுவது மற்றும் மதம், ஜாதி, இனம் எனப் பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக, ’குண்டு கையில் இருப்பதாகவும் அதை இன்னும் வீசவில்லை. என் தலைவன் கொடுத்த அந்தக் குண்டை வீசினால் முற்றிலுமாகப் பற்றி எரிந்துவிடும். அங்கு புல் பூண்டுகூட முளைக்காது. ஒரு கோடி எரிமலையை காத்த தீதான் எனது தலைவன். நாங்கள் கொளுத்திப் போட்டுவிட்டு போயிடுவோம். தமிழகமே பற்றி எரியும்’ என ஈரோடு இடைத்தேர்தல் பிரசார மேடையில் பேசியுள்ளார். மேலும், கொலைவெறியில் உள்ளதாகவும் ஆவேசமாக மிரட்டி உள்ளார்.
இவரைப் போலவே இவரது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை முருகன் என்பவர் பிரசார மேடையை பயன்படுத்தி செருப்பை தூக்கி பொதுமக்களிடம் காண்பிக்கிறார். அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசி வருகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி மிரட்டி வருகிறார். இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் பெரியதொரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகும் என புரிந்துகொள்ள முடிகிறது.
அமைதியான முறையில் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணைய சட்டவிதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். ஆகவே, இவரின் நாம் தமிழர் கட்சியினுடைய அங்கீகாரத்தை ரத்துசெய்து இவரது இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும்” என்பதனை விரிவாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் புகழேந்தி.
தலைமை தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஈரோடு மாவட்ட ஆட்சியர், தலைமை தேர்தல் கண்காணிப்பாளர், மாநில தலைமை காவல் துறை ஆணையர் ஆகியோருக்கும் மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வா.புகழேந்தி, “பிரபாகரனை இழிவுப்படுத்தும் நோக்கில் தான் சீமான் பேச்சு இருக்கிறது. எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்கு உதவி இருக்கிறார் இந்த வரலாறு தெரியாமல் பேசுகிறார்.
அதிமுக ஈரோடு தொகுதியில் போட்டி இல்லாத காரணத்தால் தீபாவளி போல் இல்லாமல் வறண்டு இருக்கிறது.
பல அரசியல் கட்சி தலைவர்களை அநாகரீகமாக பேசுகிறார் சீமான். எனவே நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என தலைமைதலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளோம்.
தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில் கட்சியை தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து இருக்கிறோம். டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு புகார் நகலை அனுப்புவதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்தார்” என்று தெரிவித்தார்.