ராஜஸ்தான் மாநிலம் சலும்பர் மாவட்டத்தில் பரவி வரும் மர்ம நோயால் கடந்த 5 நாட்களில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டா மற்றும் லால்புரா கிராமங்களில் காய்ச்சல், வாந்தி, வலிப்பு போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதலில் லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. பின்னர் வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டு, உடல்நிலை மிக மோசமடைந்து உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுவரை 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதே போன்ற அறிகுறிகளுடன் உதய்பூரில் உள்ள மகாராணா பூபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோய்க்கான காரணத்தைக் கண்டறிய உதய்பூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இது ஒரு வைரஸ் தொற்றாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே தெளிவான காரணம் தெரியவரும். மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட கிராமங்களில் முகாமிட்டு, வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ராஜஸ்தானின் சிரோஹி பகுதியிலும் இதுபோன்ற மர்ம நோய்கள் பதிவாகியுள்ள நிலையில், தற்போதைய பாதிப்பு அங்குள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.