முத்தலாக் விவகாரம் தொடர்பான தொலைக்காட்சி நேரலை விவாதம் அடிதடியில் முடிந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லியில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று முத்தலாக் தொடர்பான நேரலை விவாதத்தை ஒளிபரப்பியது. அப்போது முத்தலாக்கிற்கு எதிராக ஃபரா ஃபைஸ் என்ற பெண்மணியும், முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் மதகுருவான முஃப்தி இசாஜ் அர்ஷாத் என்பவரும் பங்கேற்றிருந்தனர். இருவரும் தங்களது கருத்தை மாறி மாறி முன்வைத்தனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் கருத்து மோதல் அதிகரித்தது. இருவரும் சீட்டிலிருந்து எழுந்து கடுமையாக கருத்தால் மோதிக் கொண்டனர்.
அவர்களை சுற்றி நின்றவர்கள் பலமுறை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஃபரா ஃபைஸ், முஃப்தியை கன்னத்தில் அறைந்தார். அதற்கு பதிலடியாக முஃப்தி, பலமுறை ஃபரா ஃபைஸை கடுமையான தாக்கினார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே தொலைக்காட்சி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் முஃப்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.