இந்தியா

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுவா ?: இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை..!

jagadeesh

அயோத்தி வழக்கு‌ தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா ? என்பது குறித்து இஸ்லாமிய அமைப்புகள் லக்னோவில் கூடி ஆலோசித்து வருகின்ற‌ன. 

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் (All India Muslim Personal Law Board - AIMPLB) மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை ஏற்பதா அல்லது வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதா என்று ஆலோசித்து வருகிறார்கள். முஸ்லிம் அமைப்பான பாபர் மசூதி நடவடிக்கை குழு மற்றும் சன்னி வகுப்பு வாரியம், அசாதுதீன் ஓவைசியின் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட அமைப்புகள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்படும் முடிவு குறித்து இன்று பிற்பகல் மூன்று மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர். அயோத்தி நில வழக்கில் சன்னி வக்ஃபு வாரியம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டாலும் மற்ற சில அமைப்புகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை.