இந்தியா

சொத்து தகராறு! தாயை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற மகன் கைது!

ச. முத்துகிருஷ்ணன்

மும்பையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை நகரத்தில் வர்தமான் நகரில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டியில் வசித்து வந்தவர் 46 வயதான சாயா பஞ்சால். இவரது மகன் 21 வயதான ஜெயேஷ் பஞ்சால். இவர்களது அண்டை வீட்டார் பஞ்சால் வீட்டின் வெளியே ரத்தக்கறைகள் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்தபோது, சாயா பஞ்சால் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சாயா பஞ்சால் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. வீட்டை முழுமையாக காவலர்கள் சோதனையிட்டபோது குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட கடிதம் மற்றும் கத்தி ஒன்றையும் கண்டுபிடித்தனர். “சில சொத்து பிரச்சினையில் மனச்சோர்வடைந்ததால் கொலை செய்துவிட்டேன்” என்று சாயாவின் மகன் ஜெயேஷ் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதையடுத்து ஜெயேஷை காவலர்கள் தேடியபோது அவர் முலுண்ட் ரயில் நிலையத்தில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதும், விழிப்புடன் இருந்த ரயில்வே காவல்துறை அதிகாரியால் அவர் காப்பாற்றப்பட்டதும் தெரிய வந்தது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.