இந்தியா

”என் மரணத்துக்கு..” - 23வது மாடியில் இருந்து குதித்த மும்பை ரியல் எஸ்டேட் அதிபர்!

JananiGovindhan

மும்பையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான பராஸ் போர்வால் இன்று தனது வீட்டில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சின்ச்போக்லி ரயில் நிலையம் அருகே உள்ள ஷாந்தி கமல் குடியிருப்பில் உள்ள 23வது மாடியில் வசித்து வந்த 57 வயதான பராஸ் போர்வால் வீட்டில் உள்ள ஜிம் வழியாக இன்று (அக்.,20) காலை 6 மணியளவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்ட அவ்வழியே சென்ற குடியிருப்பு வாசி ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பராஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்கள்.

அதன்படி, பரோஸின் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பரோஸ் கைப்பட எழுதியிருந்த கடிதம் ஒன்று கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. அதில், “என்னுடைய மரணத்துக்கு யாரும் காரணமில்லை. யாரிடமும் எந்த விசாரணையும் மேற்கொள்ள வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து பராஸின் தற்கொலைக்கு என்ன காரணம் என கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.