இந்தியா

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்க மறுத்த முகுல் ரோத்தகி.!

webteam

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்க பிரபல வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி மீண்டும் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என மத்திய அரசு விரும்பியது. இது தொடர்பாக முகுல் ரோத்தகியை மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது அவர் அந்தப் பதவியை ஏற்க இசைவு தெரிவிக்கவில்லை. முகுல் ரோத்தகி அட்டர்னி ஜெனரல் பதவியை மறுத்த நிலையில், அந்த முக்கிய பதவிக்கு யாரை நியமிக்கலாம் என மீண்டும் ஆலோசனை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கேகே வேணுகோபால் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். தனக்கு பதவி நீட்டிப்பில் இசைவு இல்லை என அவர் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த அட்டர்னி ஜெனரலாக யாரை நியமிப்பது என ஆலோசனை நடைபெற்றது. அப்போது 2014ஆம் வருடத்தில் நரேந்திர மோடி அரசு முதல் முறையாக பதவி ஏற்ற போது அட்டர்னி ஜெனரலாக பணிபுரிந்த முகுல் ரோத்தகியை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கலாம் என ஆலோசனை நடைபெற்றது. ஆனால் முகுல் ரோத்தகி இசைவு அளிக்காததன் காரணமாக மீண்டும் மத்திய அரசின் தலைமை சட்ட அதிகாரி பொறுப்புக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசின் மூத்த சட்ட அதிகாரிகளாக சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்டோர் பணியாற்றினாலும், அட்டர்னி ஜெனரலே மத்திய அரசின் தலைமை சட்ட அதிகாரியாக முக்கிய ஆலோசனைகளை எடுப்பது மற்றும் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளில் ஆஜராவது போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை மேற்கொள்கிறார். ஆகவே அடுத்த அட்டர்னி ஜெனரலாக யார் நியமிக்கப்படுவார் என்பது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

-கணபதி சுப்ரமணியம்.