இந்தியா

”என்னுடைய தாயாரின் மருத்துவச் செலவை முகேஷ் அம்பானி ஏற்றார்” - நடிகை ராக்கி சாவந்த்

webteam

தன்னுடைய தாயாரின் மருத்துவச் செலவை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஏற்றியிருப்பதாக இந்தி நடிகை ஏற்றியிருப்பதாக ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விளங்கும் ராக்கி அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளிலும் சிக்கிக் கொள்பவர். இவர், தமிழ் சினிமாவில் ‘என் சகியே’, ‘முத்திரை’ படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். 2019ஆம் ஆண்டு ரிதீஷ் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர், கடந்த ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

சமீபத்தில், மைசூருவைச் சேர்ந்த ஆதில் கான் துரானியைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் மீது விமர்சனம் எழுப்பப்பட்டது. இந்த நிலையில், அவரது தாயாரான ஜெயந்தி சாவந்துக்கு மூளையில் கட்டி மற்றும் புற்றுநோய் இருப்பது தெரியவந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்காக, ‘பிக்பாஸ் மராத்தி’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ராக்கி சாவந்த், அதில் இருந்து வெளியேறினார். அந்த சமயத்தில், கண்ணீருடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், “என் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனையில் கேன்சருடன் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மூளையில் கட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள்” என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ராக்கி சாவந்தின் தாயாருடைய மருத்துவச் செலவை பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஏற்றிருப்பதாக ராக்கி சாவந்தே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராக்கி சாவந்த் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “நான் அம்பானிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் என் அம்மாவின் சிகிச்சைக்கு உதவி சொல்வதாக சொல்லியிருக்கிறார். அவரின் சிகிச்சைக்காக கிரிட்டிகேர் மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராக்கி சாவந்தின் தாயார், மும்பை டாடா புற்றுநோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார், அங்கு அவர் ஆபத்தான நிலையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு ராக்கி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

- ஜெ.பிரகாஷ்