விவசாய கடன் ரூ.23,815 இருக்க தள்ளுபடியாக ரூ13 மட்டுமே அறிவிக்கப்பட்டதால் விவசாயி ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பாக, ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி மத்தியப் பிரதேச முதலமைச்சராக கமல்நாத் தான் பொறுப்பேற்ற நாளில், விவசாய கடன் தள்ளுபடிகளுக்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 15-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்த நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் விவசாய கடன் ரூ.23,815 இருக்க தள்ளுபடியாக ரூ13 மட்டுமே அறிவிக்கப்பட்டதால் விவசாயி ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். ஷிவால் கதாரியா என்ற விவசாயி, விவசாய கடன் தள்ளுபடிக்கான விண்ணப்பத்தை பதிவு செய்து வழங்கியிருந்தார். அதன்படி கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியிருந்தது. அதில் ஷிவால் கதாரியாவின் பெயரில் ரு.13 மட்டுமே தள்ளுபடி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ 2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மாநில அரசு உறுதி அளித்தது. அதனால் என் மொத்த விவசாய கடனான ரூ.23,815 ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என நம்பினேன். ஆனால் வெறும் 13 ரூபாயை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர்.
நான் ஒரு நேர்மையான விவசாயி. என் கடன் தவணைகளை முறைப்படி செலுத்தி வந்தேன். எதற்காக ரூ.13 மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள் என கேட்டபோது, கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நாளில் எனக்கு எந்த கடனும் இல்லை என தெரிவிக்கிறார்கள். விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் நிறைய முறைகேடுகள் உள்ளன. இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல உள்ளேன்” எனக் கூறினார்.