இந்தியா

இயற்கையின் மீது இத்தனை ஆர்வமா? கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு 3200 KM பயணித்த ம.பி. தம்பதி!

JananiGovindhan

இயற்கையை காப்பாற்றுவதற்காக கார்ப்பரேட் வேலையை உதறித்தள்ளிவிட்டு 3200 கிலோ மீட்டர் தொலைவுக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவர் ட்ரெக்கிங் செய்திருக்கிறார்கள்.

புதுவிதமான சுற்றுலா அனுபவங்களை பெற ட்ரெக்கிங் உள்ளிட்ட சாகச பயணங்களை சிலர் மேற்கொள்வர். ஆனால் இப்படியான சாகச பயணங்களை மேற்கொண்டு பல சமூக பிரச்னைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிகில், பரிதி என்ற தம்பதி சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் மூவாயிரத்து இருநூறு கிலோ மீட்டர் மலையேற்றம் செய்திருக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமையான நேற்று (செப்.,27) ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் பகுதியை அடைந்திருக்கிறார்கள். இந்த சாகச பயணத்தை மேற்கொள்வதற்காக நிகில், பரிதி தம்பதி தங்களுடைய கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லடாக் பகுதியில் கடுமையான குளிர் வாட்டி வதைத்ததால் தங்களுடைய பயணத்தை இந்த தம்பதி தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்கள்.

ஆகையால் மார்ச் மாதம் வரை நிறுத்தி வைத்திருந்த விழிப்புணர்வுக்கான தங்களது சாகச பயணத்தை ஏப்ரல் மாத மத்தியில் லடாக்கில் எங்கு விட்டார்களோ அங்கிருந்து தொடர்ந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள நிகில், பரிதி தம்பதி, “ஸ்ரீநகரில் உள்ள லால் செளக்கை அடைவதற்கு 3200 கிலோ மீட்டர் பயணித்து 19 மலைகளை கடந்திருக்கிறோம். சுற்றுச்சூழலைப் பற்றியும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பியே இந்த பயணத்தை மேற்கொண்டோம்.

எங்கள் இலக்கை அடைவதற்குள் பெரும் சவால்கள் நிறைந்திருந்தன. குறிப்பாக நிலச்சரிவுகள், சில மோசமான வழித்தடங்கள் இருந்தன. இருப்பினும் இந்த சிரமங்களை விட வெகுமதிகள் அதிகமாகவே இருக்கின்றன.

எல்லா இடங்களிலும் உள்ள மக்களின் ஆதரவையும் அன்பையும் நாங்கள் பெற்றோம், இது எங்களுக்கு நேர்ந்த தடைகளை மறக்கச் செய்திருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்கள்.