இந்தியா

ம.பி அமைச்சரவை விரிவாக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்கள் இருவருக்கு அமைச்சர் பதவி

Veeramani

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேச அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, ஜோதிராதித்யா சிந்தியாவின் இரண்டு ஆதரவாளர்கள் அமைச்சர்களாக்கப்பட்டனர்.

மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களான துளசிராம் சிலாவத் மற்றும் கோவிந்த் ராஜ்புத் ஆகியோருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்

மத்திய பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் காங்கிரசிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத்தின் அரசை வீழ்த்தினார். காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் 2020 மார்ச் மாதம் சிவராஜ் சவுகான் நான்காவது முறையாக மாநில முதல்வராக பதவியேற்றதிலிருந்து இது மாநில அமைச்சரவையின் மூன்றாவது விரிவாக்கமாகும். ராஜ் சிலவத் மற்றும் ராஜ்புத் ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவையில் முதல் விரிவாக்கத்தின்போது சேர்க்கப்பட்டனர்.

இருப்பினும், அவர்கள் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாததால் அக்டோபரில் பதவி விலக வேண்டியிருந்தது. நவம்பர் 3 ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், 28 இடங்களில் 19 இடங்களை பாஜக வென்றது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒன்பது இடங்களைப் பிடித்தது. இடைத்தேர்தலில் சிலாவத் மற்றும் ராஜ்புத் ஆகியோர் வெற்றி பெற்றபின் அமைச்சர்களாகியுள்ளனர்.