இந்தியா

பூஜைப் பொருட்களை தொட்ட பட்டியலின சிறுவனை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம்!

ச. முத்துகிருஷ்ணன்

மத்திய பிரதேசத்தில் பூஜைபொருட்களை தொட்டதாக பட்டியலின சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஜெயின் கோவில் ஒன்றில் நுழைந்து, அங்கிருந்த பூஜை பொருட்களை 11 வயது சிறுவன் தொட்டதாக கூறி அவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து அச்சிறுவனை இழுத்து வந்தவர்கள், கை மற்றும் கழுத்தை கயிறால் இறுக்கி, மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அச்சிறுவன் கதறி அழுவதையும் அங்கிருந்தவர்கள் பொருட்படுத்தவில்லை.

அங்கு இறைவனுக்கு பிரசாதமாக வைக்கப்பட்டிருந்த பாதாமை சிறுவன் தொட்டதற்காக இவ்வளவு மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயின் கோவில் பூசாரி ராகேஷ் ஜெயின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோதிநகர் காவல் நிலைய பொறுப்பாளர் சதீஷ் சிங் தெரிவித்தார். மேலும் அவர் மீது பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சதீஷ் சிங் தெரிவித்தார்.

குழந்தைகளும், தெய்வமும் ஒன்றே எனக் கூறும் நம் நாட்டில் பூஜை பொருட்களை தொட்டுவிட்டதாக பட்டியலின சிறுவன் கருணையின்றி தாக்கப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.