காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தாய் ஒருவர் மனு அளித்துள்ளார். 21 முறையாக அவர் புதுச்சேரிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியை சேர்ந்த குருசாமி, பேச்சியம்மாள். இவர்கள் அங்கு சலவைத்தொழில் செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் ரவி (30). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு புதுச்சேரி வந்த போது விபத்து ஒன்றில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சியம்மாவிற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மகனை காண அவர்கள் அந்த மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், அங்கு அவர்களது மகனை காணவில்லை. பின்னர், 2019 ஆண்டு முதல் புதுச்சேரிக்கு கடந்த 2 ஆண்டுகளாக 21 முறை வந்து தேடிவிட்டு செல்கிறார் அந்த தாய். தன் மகனைத் தேடி புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. இருந்தாலும் அரசு மருத்துவமனை, புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் தேடி அலைந்த பேச்சியம்மாள் தனது மகனை தேடுவதற்காக மட்டும் தனது கழுத்தில், காதில் இருந்த நகைகளை விற்று சுமார் 60 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்.
தன்னிடம் வைத்துள்ள பையில் மகனை கண்டுபிடிக்க மனுக்கள் ஆகவும், புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் வைத்துள்ள அவர், சாலைகளில் யாரை பார்த்தாலும் அவர்களிடத்தில் தனது மகனின் புகைப்படத்தை காண்பித்து மகனை விசாரித்து கண்டுபிடித்து தரும்படி கதறும் காட்சி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
அடுத்த முயற்சியாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளிப்பதற்காக இன்று சட்டசபை வாசலில் அமர்ந்து இருந்த அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார். உடனடியாக இவரது மகனை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தூத்துக்குடியில் இருந்து புதுச்சேரியை நம்பி வந்துள்ள இந்த மூதாட்டியிடம் புதுச்சேரி அரசும், காவல்துறையும் தாமதிக்காமல் அவரது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.