சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில் டெல்லியில் உள்ள ஆஸ்ரமத்தில் இருந்து 40 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள ரோகினி பகுதியில் உள்ளது ஆத்யத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆஸ்ரமம். இதன் சாமியார் விரேந்திர தேவ் திக்ஷித். இவர் மீது பல பெண்கள் பாலியல் புகார் கொடுத்தும் அந்தப் பகுதி போலீசார் கண்டுகொள்ளவில்லை. பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்ரமத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. உள்ளே யாரும் அவ்வளவு எளிதாக அனுமதிக்கப்படுவதில்லை. உத்தரபிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநில பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் சாமியார் விரேந்திர தேவால் பாலியால் வன்கொடுமை செய்யப்பட்ட 3 பெண்களின் சார்பாக, அரசு சாரா அமைப்பு ஒன்று வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஆஸ்ரமத்தை வீடியோ பதிவுடன் ஆய்வு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட 32 வயது பெண் ஒருவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், சாமியார் விரேந்திர தேவ், தன்னை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்றும் தன்னை போல பலர் உள்ளே அடைக்கப்பட்டிருப்பதாகவும் நூறு சிறுமிகளுக்கு மேல் அடைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆஸ்ரமத்தை ஆய்வு செய்த போலீசார் அங்கிருந்த 40 சிறுமிகளை மீட்டுள்ளனர்.
இதுபற்றி வழக்கறிஞர் நந்திதா ராவ் என்பவர் கூறும்போது, ‘நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் அங்கு விலங்குகளை போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இருட்டுக்குள் வாழும் அவர்களில் சிலருக்கு உடல் நிலை சரியில்லை’ என்றார்.
போலீசாருடன் ஆஸ்ரமத்துக்குள் சென்ற டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், ‘ஒரு பறவை கூட, அனுமதியின்றி உள்ளே செல்லவோ, அங்கிருந்து வெளியேறவோ முடியாதபடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அங்குள்ளவர்கள் யாருடனும் பேசக்கூடாது, எதையும் வெளியில் சொல்லக் கூடாது, சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள். சாமியார் விரேந்தர் தேவை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்றார்.
இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.