இந்தியா

காணொலி காட்சி மூலம் மழைக்கால கூட்டத் தொடரை நடந்த மத்திய அரசு யோசனை?

PT


கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர்கள் மாற்றுத் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான மழைக்கால கூட்டத்தொடர்கள் ஜூலை மாத இறுதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடர்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் நடக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எக்னாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் “ மத்திய அரசு 776 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமரக்கூடிய கட்டடத்தில் சமூக இடைவெளியுடன் அமர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது.

நாடாளுமன்ற விதிகளின்படி மழைக்கால கூட்டத்தொடர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்திற்குச் செப்டம்பர் 23 வரை அதற்கான அவகாசம் இருப்பதால் அரசு அமர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை தற்போது ஆராய்ந்து வருகிறது. அதே போல நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் மோடி தலைமையிலான அரசு எளிய மக்களுக்கான விரிவான திட்ட அறிக்கை வெளியிடும் என்றும் நம்பிக்கை நிலவி வருகிறது.

இது மட்டுமல்லாமல் இந்தக் கூட்டத்தொடர்களை ஆன்லைனில் காணொலி மூலம் நடத்தத் திட்டம் இருப்பதாகவும், அதற்கான பிரத்யேக மென்பொருள் சாதனங்களை உருவாக்குவதற்கான பணிகளை மத்திய அரசு கவனித்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.