இந்தியா

மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி ! நிவாரண நிதி கொடுத்த மம்மூட்டி, துல்கர்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள மக்களுக்கு உதவுவதற்காக தமிழ் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சமும் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்டமாக, ரூ.5 லட்சம் வழங்கியிருக்கிறது. கேரள மாநில, நடிகர் விஜய் ரசிகர் மன்றமும் உதவி செய்துள்ளது. 

இந்நிலையில் கேரள நடிகர்கள் சங்கமான ’அம்மா’, ரூ10 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. பெரும்பாலான கேரள, நடிகர், நடிகை கள் நிவாரண நிதி கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கு கேரளாவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் அவர்களை விமர்சித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து மலையாள நடிகர் மம்மூட்டியும் அவர் மகனும் நடிகருமான துல்கர் சல்மானும் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிவாரண நிதி வழங்கியுள்ளனர். இதில் மம்மூட்டி சார்பாக 15 லட்சமும், துல்கர் சல்மான் சார்பில் 10 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. இந்த நிதி முதலமைச்சர் பொது நிவாரண நிதி பெயருக்கு வழங்கப்பட்டது. மேலும் நடிகர் மோகன் லாலும் தன்னுடைய பங்குக்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.