பிரதமர் மோடி
பிரதமர் மோடி Twitter
இந்தியா

"நான் என் வீட்டை பற்றி நினைத்திருந்தால், ஏழை மக்களுக்கு வீடு கட்டியிருக்க மாட்டேன்" - பிரதமர் மோடி

webteam

செய்தியாளர்: ராஜிவ்

டெல்லி பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய பொதுக்குழு கூட்டத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி

அங்கு பேசிய பிரதமர் மோடி... “அடுத்த 100 நாட்களில் ஒவ்வொரு புதிய வாக்காளரையும், பயனாளிகளையும் அனைத்து சமூகத்தினரையும் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வைக்க வேண்டும். அதில் பாஜக மட்டும் 370 இடங்களில் வெற்றிபெற செய்ய வேண்டும். நான் பிரதமர் பதவியை அனுபவிப்பதற்காக மீண்டும் வரவேண்டு என கூறவில்லை, பல தசாப்தங்களாக முடிக்காமல் இருந்த பணிகளை நாம் முடித்துக் காட்டியிருக்கிறோம்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் 5 நூற்றாண்டுகள் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது பாஜக. பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்திருக்கிறோம்.

செங்கோட்டையில் கழிவறை விவகாரத்தை கையில் எடுத்து பேசிய முதல் பிரதமர் நான். பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதில் நான் பெருமை அடைகிறேன்.

பிரதமர் மோடி

நான் எனது வீட்டை பற்றி நினைத்திருந்தால், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு வீடு கட்டியிருக்க மாட்டேன். ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே நான் வாழ்கிறேன். நாட்டு மக்களுக்காகவே வாழ்கிறேன்.

நாம் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். 18 வயதை எட்டிய இளைஞர்கள் நாட்டின் 18வது லோக்சபாவை தேர்வு செய்ய இருக்கிறார்கள். பிரசாரத்தின் போது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் நாம் சென்றடைய வேண்டும். அனைவரது நம்பிக்கையயும் பெற வேண்டும்.

பிரதமர் மோடி

அடுத்த 100 நாட்கள் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். நாட்டு மக்களின் கனவுதான் எனது கனவு. மக்களுக்காக பகல், இரவு பாராமல் வேலை செய்து வருகிறோம். நாட்டிற்கு சேவை செய்ய அதிக இடங்களை தேர்தலில் பாஜக வெற்றி பெறும்” என்று பிரதமர் பேசினார்.