இந்தியா

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி - விரைவில் குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து

PT
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று இரவு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஹீராபென் மோடி கடந்த ஜூன் மாதம் 99 வயதை அடைந்தார். ஆனால் தற்போது உடல்நிலை சரியில்லாத நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். UN மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி & ஆராய்ச்சி நிலையம், அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்திருக்கிறது. 


இந்நிலையில் மோடியின் தாயாரை பார்க்க, குஜராத் பாஜக அமைச்சர் தர்ஷனாபென் வகேலா மற்றும் கௌசிக் ஜெயின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். பிரதமர் மோடி பலமுறை அவருக்கும் அவரது தாய்க்கும் இடையில் இருக்கும் நெருங்கிய பந்தத்தைப் பற்றி கூறியிருக்கிறார். மோடி சமீபத்தில் குஜராத்தில் நடந்த சட்டசபை வாக்குப்பதிவின் பரப்புரையின்போது அவரது தாயைச் சந்தித்து அவருடன் தேநீர் அருந்திப் பேசிக் கொண்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்  வைரலானது. தனது 99 ஆவது பிறந்த நாளை கடந்த ஜூன் மாதம் கொண்டாடிய ஹீராபென்னை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, தனது தாயார் 100ஆவது வருடத்தில் அடியெடுத்து வைப்பதைக் குறித்து உணர்ச்சிப்பூர்வத்துடன் “அம்மா” என்ற தலைப்பில் வலைப்பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார்
ஹீராபென் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, மோடியின் சகோதரர் பிரஹல்ட் மோடி மற்றும் குடும்பத்தினர் மைசூரில் வாகனம் விபத்துக்கு உள்ளான் செய்திக்குப் பிறகு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், மோடியின் தாயார் விரைவில் குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு முடிவில்லாதது மற்றும் விலைமதிப்பற்றது. இந்த கடினமான நேரத்தில் எனது அன்பும் ஆதரவும் உங்களுடன் உள்ளது. உங்கள் தாயார் விரைவில் குணமடைவார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி.
-ஷர்நிதா