தவறான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான விதியை திரும்பப் பெற பிரதமர் அலுவலகம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
தவறான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்களின் அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்வது உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட வழிகாட்டு விதிமுறையை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தவறான செய்தி என்பதற்கு வரையறை என்ன என்பதை அரசு குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து விதிமுறைகளை திரும்பப் பெறக் கோரி பிரதமர் அலுவலகம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில் அரசு தனது விதியை 24 மணி நேரத்திற்குள் திரும்பப் பெற்றது எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகத்தினருக்கும் கிடைத்த வெற்றி என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.