கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும்படியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அது, பிராந்திய மோதலாக உருவெடுத்தது. தொடர்ந்து, இந்நாடுகளிடையே மோதல்கள் அதிகரித்த நிலையில், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது உலகம் முழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறையாலும், விலையேற்றங்களாலும் உலக முழுவதிலும் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தான் மத்தியஸ்தம் காரணமாக கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. எனினும், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல், ஈரானின் யுரேனியம் இருப்பு தொடர்பான விவாகரங்களில் முரண்பாடு நிலவி வந்த நிலையில், நிரந்த போர் நிறுத்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வந்தது. எனினும், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின.
இந்த நிலையில், போர் முடிவடைந்ததாகவும், அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் இரு நாடுகளும் அறிவித்துள்ளன. அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி அரசுத் தொலைக்காட்சியில் பேசியபோது உறுதிப்படுத்தினார். அதேவேளையில், டிரம்ப் சமூக ஊடகங்களில் எண்ணெய் தடையின்றி பாயட்டும் என்று பதிவிட்டார். மேலும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை சுங்கக்கட்டணம் இன்றி திறக்கப்படும் என்று ஈரானும், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பபெறப்படும் என்றும் அமெரிக்காவும் அறிவித்துள்ளன. இந்த அமைதி ஒப்பந்தம் வரும் ஜூன் 19-ம் தேதி ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்தத்தை ஸ்வீடன், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. இந்தசூழலில் தான், இந்தப் போர் நிறுத்தத்தை வரவேற்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஈரான் அமெரிக்கா இடையிலான போர் மேற்காசிய நாடுகள் உட்பட உலகெங்கிலும் கடுமையான பொருளாதார சீர்குலைவை போர் ஏற்படுத்தியதாகவும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாடுகளும் முடிவு செய்திருப்பதற்கு வரவேற்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளதால் கப்பல் மற்றும் வர்த்தக சுதந்திரம் மீண்டும் உறுதி செய்யப்படும் என இந்தியா உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மீதமுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்து ஆலோசித்து ஒரு நீடித்த இறுதி ஒப்பந்தத்தை இரு நாடுகளும் எடுப்பதைக் காண இந்தியா ஆவலோடு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.