Police
Police pt desk
இந்தியா

கர்நாடகா: காணாமல்போன 7 வயது சிறுமி சாக்கு மூட்டையில் இருந்து சடலமாக மீட்பு

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம், கின்னலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா மடிவாளா. இவரது மகள் அனுஸ்ரீ (7). கடந்த 19-ஆம் தேதி காலை விளையாட வெளியே சென்றுள்ளார். அவர், மதியம் வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் சிறுமியை காணாத நிலையில், அன்று மாலை கொப்பால் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சாக்கு மூட்டை

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு, சிறுமியை பல இடங்களிலும் தேடிவந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை காணாமல்போன சிறுமியின் வீட்டருகே உள்ள காலியிடத்தில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்ததை பார்த்துள்ளனர். அப்போது சாக்கு மூட்டையில் சிறுமியின் கால் தென்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யசோதா தலைமையிலான போலீசார், மூட்டையை பிரித்து சோதனை செய்தனர். அப்போது அதில், காணாமல்போன சிறுமி சடலமாக இருந்தது தெரியவந்தது, இதையடுத்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள்

7 வயது சிறுமியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் அந்தக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது