இந்தியா

எம்பி பதவிக்கு தேமுதிகவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

எம்பி பதவிக்கு தேமுதிகவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

webteam

தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 6 முதல் 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார். மேலும், கூட்டணி தர்மத்தின் படி தேமுதிகவுக்கு எம்பி பதவியை அதிமுக தரும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுத்தீஷ் நேற்று சந்தித்தார். அடையாரில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது மாநிலங்களவை எம்பி பதவி குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை. பாமகவுக்கு மட்டுமே எம்பி பதவி தருவதாக அப்போது அதிமுக ஒப்பந்தம் செய்தது” என தெரிவித்தார். மேலும் ரஜினி-கமல் இணைந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என ஜெயக்குமார் தெரிவித்தார்.