தெலங்கானாவில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு இதயம் மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
வாராங்கலை சேர்ந்த விவசாயி நரசிம்மா என்பவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் முன் வந்தனர். அதனடிப்படையில் நரசிம்மாவின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை உள்ளிட்ட எட்டு உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த நிலையில் நரசிம்மாவின் இதயத்தை ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் செயல்படும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
சாலை மார்க்கமாக இதயத்தை கொண்டு செல்வதில் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படும் என்று கருதிய அதிகாரிகள் அதனை ஹைதராபாத் மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதயத்தை எல்பி நகர் பகுதியில் இருந்து ஜுப்ளி ஹில்ஸ் பகுதிக்கு கிரீன் சேனல் என்று கூறப்படும் தடையில்லா போக்குவரத்து மூலம் கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து எல்பி நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கிரீன் சேனல் மூலம் ஐந்து நிமிட நேரத்தில் இதயத்தை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து 30 நிமிட நேரத்தில் பயணிகள் இல்லாத ஒரு மெட்ரோ ரயில் மூலம் அந்த இதயம் ஜூப்ளி ஹில்ஸ் ரயில் நிலையத்திற்கு இடைநில்லாமல் கொண்டு செல்லப்பட்டது.