இந்தியா

12% ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு: நாப்கின்கள் மூலம் நூதன பிரச்சாரம்

12% ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு: நாப்கின்கள் மூலம் நூதன பிரச்சாரம்

webteam

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நாப்கின்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 12சதவிகித ஜிஎஸ்டியை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டியை கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியில் நாப்கின்களுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. நாப்கின் பெண்களின் மாதாந்திர தேவை என்பதால் அதற்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் நாப்கின்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 12 சதவிகித ஜிஎஸ்டியை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாப்கின்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்த பெண்களின் கருத்துகளை  நாப்கின்களில் பதிவு செய்து வருகின்றனர். 

இதுதொடர்பாக சமூக அர்வலர்கள் கூறுகையில்,   “இந்த பிரச்சாரத்தை கடந்த 4ஆம் தேதி தொடங்கினோம்.கிராமப்புறங்களில் உள்ள பெண்களால் ரூபாய் 100 செலவு செய்து நாப்கின்களை வாங்க இயலாது. இந்த 12சதவிகித ஜிஎஸ்டி என்பது கிராமப்புற பெண்கள் சுகாதாரமான நாப்கின்களை பயன்படுத்த ஊக்கப்படுத்தாது. இதனால் அவர்கள் இதற்கு முன் அந்த காலகட்டங்களில் எந்த முறையை பின்பற்றினார்களோ அதனையே கடைப்பிடிப்பார்கள். சுகாதாரமற்ற நாப்கின்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சாரம் மூலம் அவர்களுக்கு இலவச நாப்கின்கள் அல்லது குறைந்த பட்சம் ஜிஎஸ்டி இல்லாமல் நாப்கின்கள் கிடைக்க வேண்டும். சுமார் 1000 நாப்கின்களில் பெண்களின் கருத்துகளை பதிவு செய்து வரும் மார்ச் 3ம் தேதி அரசுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தனர்.