இந்தியா

"பாஜக-வை விட்டு எஸ்கேப் ஆகும் பீஃப் விரும்பிகள்"

webteam

பாஜக அரசின் மாட்டிறைச்சி தொடர்பான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தில் சுமார் 5 ஆயிரம் பாஜகவினர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.

கால்நடைச் சந்தைகளில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தின் பாஜக மாநில தலைவர் ஆன்டோனியஸ் பதவி விலகினார். மத்திய அரசின் இந்த சட்டம் ஏழை எழிய மற்றும் பழங்குடி மக்களை பாதிக்கும் என்ற குற்றச்சாட்டுடன் பதவி விலகிய அவர், கட்சிக்காக எங்களின் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

இந்நிலையில் இவரை தொடர்ந்து தற்போது அம்மாநிலத்தின் பாஜக கட்சியிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோரும் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.