ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் இஞ்சினியரிங் படிக்கும் இளைஞர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் மாணவர் முஹமத் ஹசன் அலி. இவர் இப்போது 7ஆம் வகுப்பில் படித்து வருகிறார். இவருக்கு 11 வயதாகிறது. ஆனால் இவர் தற்போது இஞ்சினியரிங் சிவில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார். மேலும் எலக்ட்ரிகல் அண்டு மெகானிக்கல் படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்பு எடுக்கிறார். இந்தச் செய்தி ஹைதராபாத் முழுக்க பெரும் உற்சாகத்தை ஏற்படுத்து உள்ளது. குறைந்தது இவரிடம் 30 மாணவர்கள் படிக்கிறார்கள். சிறுவர் பருவத்திலேயே பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இவர் எடுத்து வரும் பாடத்திற்காக எந்தவித தொகையையும் பெருவதில்லை. முற்றிலும் இலவசமாகவே போதித்து வருகிறார்.
தினமும் தனது பள்ளியிலிருந்து திரும்பிய உடன் தனக்கு கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடங்களை முழுவதுமாக முடித்து விடுகிறார் ஹசன். அதன் பின் இவர் மைதானத்திற்கு விளையாட செல்கிறார். அதன் பிறகு 6 மணிக்குமேல் வீட்டிற்கு வந்து பொறியியல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இது குறித்து ஹசன், “கடந்த ஒரு வருடமாக பாடம் நடத்தி வருகிறேன். தினமும் காலையில் என் பள்ளிக்குச் செல்வேன். அதன் பிறகு மாலை 3 மணிக்கு வீட்டுக்குத் திரும்புவேன். அதன் பிறகு விளையாட போவேன். வீட்டுப் பாடங்களை முடிப்பேன். அதன் பிறகு பயிற்சி மையத்திற்கு சென்று பொறியியல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவேன். என்னிடம் சிவில், எலக்ட்ரிகல், மெக்கானிகல் என பலதுறை பொறியியல் மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பாடங்களை இண்டர்நெட் மூலம் நானே தெரிந்து கொண்டு அவர்களுக்கு வகுப்பை எடுப்பேன். இதற்காக நான் எந்தத் தொகையையும் பெறுவதில்லை. என் நாட்டுக்கு நான் எதாவது செய்ய விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.
இவரிடம் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் இதற்கான பாரட்டுக்கள் முழுக்க எங்களின் ஆசிரியர் ஹசனுக்கே சேரும் என்கிறார்கள். இவரிடம் படிக்கும் சிவில் இஞ்சினியர் சுஷ்மா, “நான் இங்கு தினமும் வருவதால் சிவில் சாஃப்ட்வேர் பற்றி நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இங்குள்ள எல்லோரும் ஆசிரியர் ஹசனை விட பெரியவர்கள், ஆனால் சொல்லிக் கொடுப்பதில் அவருக்கு எந்தத் தடையும் இல்லை.” என்கிறார்.