கொரோனா தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு புதிதாக ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை என சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு, புள்ளிவிவரத்துடன் விளக்கத்தையும் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"கொரோனா தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு புதிதாக ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை என சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சீரம் இந்தியா நிறுவனத்திடம் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கும் கடைசியாக கடந்த மார்ச் மாதம் ஆர்டர் கொடுக்கப்பட்டதாக அந்த செய்திகள் கூறுகின்றன. இந்தச் செய்தி முற்றிலும் தவறானதும், அடிப்படை ஆதாரமற்றதுமாகும்.
மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், 11 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்க சீரம் இந்தியா நிறுவனத்துக்கு 100 சதவீத முன்பணமாக ரூ.1732.50 கோடி (வரி பிடித்தம் செய்யப்பட்ட பின் ரூ.1699.50 கோடி) 2021 ஏப்ரல் 28ம் தேதி வழங்கப்பட்டது. அதை அந்நிறுவனம் அன்றே பெற்றுக் கொண்டது. தற்போது வரை, கடந்த முறை கொடுக்கப்பட்ட 10 கோடி டோஸ் ஆர்டரில், 3.5.2021 வரை 8.744 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பாரத் பயோடெக் இந்தியா நிறுவனம் 5 கோடி கோவாக்சின் டோஸ்கள் வழங்க, 100 சதவீத முன்பணம் ரூ.787.50 கோடி (வரி பிடித்தத்துக்குப் பின் ரூ.772.50 கோடி) 2021 ஏப்ரல் 28ம் தேதி வழங்கப்பட்டது. அதை அன்றைய தினமே அந்நிறுவனம் பெற்றுக் கொண்டது. தற்போது வரை, கடந்த முறை கொடுக்கப்பட்ட 2 கோடி டோஸ் கோவாக்சின் ஆர்டரில், மே 3ம் தேதி வரை 0.8813 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகையால், தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு புதிதாக ஆர்டர் கொடுக்கவில்லை என கூறுவது தவறானது.
2021 மே 2ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசு 16.54 கோடி தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. 78 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள் அவைகளிடம் இன்னும் கையிருப்பில் உள்ளன. கூடுதலாக 56 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த 3 நாட்களில் அனுப்பப்படவுள்ளன.
தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொரோனா தடுப்பூசி வியூகத்தின் கீழ், மத்திய மருந்துகள் ஆய்வகம் ஒப்புதல் அளித்த தடுப்பூசிகளின் 50 சதவீத மாதாந்திர பங்கை மத்திய அரசு கொள்முதல் செய்து, ஏற்கெனவே வழங்கியது போல், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கும்"