இந்தியா

"சிறார்களின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை" - மத்திய அரசு தகவல்

Veeramani

சிறார்களின் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மக்களவையில் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைகளின் தற்கொலை அதிகரித்து வருவதாக கூறப்படுவது உண்மையா எனவும் அது உண்மையெனில், தற்கொலையைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்றும் மக்களவையில் பாரிவேந்தர் எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தடுக்க மத்திய கல்வித்துறை மனோதர்பன் என்ற செயலாக்க முன்முயற்சி திட்டத்தை கொண்டுவந்துள்ளதாகக் கூறினார்.

அது, மாணாக்கர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு மனநலம் மற்றும் உணர்வுப்பூர்வமான உளவியல் ஆதரவை வழங்கிட பரந்த அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கிய திட்டமாகும் என்றும் தெரிவித்தார். குழந்தைகளின் கவலைகளை பகிர்ந்து கொள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் நாடு முழுவதும் கலந்தாய்வு மையங்களை தொடங்கி நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 270 ஆலோசகர்கள் இலவசமாக சேவை வழங்கி வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா விளக்கமளித்தார்.