மராத்தி மொழி கட்டாயம் Pt web
இந்தியா

மும்பை | ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி கட்டாயம்.. உரிமம் பறிபோகும் ஆபத்து?

மஹாராஷ்டிராவில் பணிபுரியும் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மராத்தி மொழியை கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Premkumar S

மஹாராஷ்டிர மாநில தினம் மே-1 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக், மே-1 ம் தேதி முதல், அந்த மாநிலத்தில் பணிபுரியும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் கட்டாயம் மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். மஹாராஷ்டிர அரசின் இந்த முடிவு ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதையும், நகரங்கள் முழுவதும் சிறந்த சேவையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதாப் சர்நாயக்

இதையடுத்து, இந்த விதியை அமல்படுத்த ஓட்டுநர்கள் மராத்தி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, போக்குவரத்துத் துறை மாநிலம் தழுவிய சரிபார்ப்பு இயக்கத்தை நடத்தும். டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயமாக மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்தும், முன்னர் கடுமையாக அமல்படுத்தப்படாத இந்த விதியை அரசு கடுமையாக அமல்படுத்துவதால், விதிகளைப் பின்பற்றத் தவறுபவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்திருந்தது பெரும் பேசுபொருளானது.

இந்த சூழலில் தான், மராத்தி மொழிக்கு மரியாதை அளிப்பது முக்கியம் என்றாலும், மொழித்திறன் அடிப்படையில், ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்வது ஒரு தீவிரமான நடவடிக்கை என  காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் விமர்சித்திருக்கிறார். அதேபோல, மராத்தி மொழியை ஊக்குவிப்பதில் தங்களுக்கு உடன்பாடுதான் என்றும் ஆனால், மராத்தி பேச தெரியாத ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்வோம் என மிரட்டுவது தவறு எனவும் சிவசேனா தெரிவித்திருக்கிறது.

Taxi

தொடர்ந்து, மஹராஷ்டிராவைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கங்களும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மகாராஷ்டிராவின் ஆட்டோரிக்ஷா சாலக் மாலக் சங்கதனா சன்யுக்த் க்ருதி சமிதி (ACMSSKSM) அமைப்பின் தலைவர் ஷஷாங்க் ராவ் கூறுகையில், அரசின் இந்த முடிவு சுயதொழில் செய்யும் ஓட்டுநர்களுக்கு நேரடியான அச்சுறுத்தல் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், தற்போது ஓட்டுநர் உரிமங்கள் பெற்றுள்ளவர்கள், தற்போதைய விதிமுறைகளின் மூலமே, ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றிருக்கின்றனர். மராத்தி மொழி தெரியாத ஓட்டுநர்களின் உரிமங்களை ரத்து செய்யாமல், ஓட்டுநர்கள் விதிகளைப் பின்பற்றுவதற்கு உதவும் வகையில், மொழிப் பயிற்சி போன்ற ஆதரவு வழிமுறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்படும் என்ற அரசின் இந்த முடிவுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்புகளில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தான், மராத்தி கற்க விரும்பும் ஓட்டுநர்களுக்கு இலவசமாக மொழிப்பயிற்சி அளிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓட்டுநர்கள் மே 4 அன்று மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருக்கும் நிலையில், ஏப்ரல் 28 அன்று தொழிற்சங்கங்களுடன் கூட்டம் நடத்தி, இந்த முன்மொழிவு குறித்து அவர்களுடன் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.