இந்தியா

விக்கி கவுசல் - கத்ரீனா தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் 5 மணி நேரத்தில் அதிரடி கைது!

நிவேதா ஜெகராஜா

பிரபல பாலிவுட் தம்பதி விக்கி கவுசல், கத்ரீனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் தம்பதியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுசலுக்கு, சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து இன்ஸ்டாகிராம் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் அவர்கள் மும்பை சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதையடுத்து கொலை மிரட்டல் விடுத்த மன்விந்தர் சிங் என்ற நபரை தற்போது கைது செய்துள்ளனர்.

கைதான அந்நபர், 25 வயதேயான மன்விந்தர் சிங் என மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது. இவர் நடிப்பின் மீதான ஆர்வத்தில் லக்னோவிலிருந்து மும்பைக்கு வந்தவர் என்றும், மும்பையின் புறநகர் பகுதிகளில் தங்கியிருந்தார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 12-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர், தற்போதும் தன்னுடைய செலவுகளுக்காக குடும்பத்தையே சார்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகை கத்ரீனாவின் தீவிர ரசிகரான மன்விந்தர் சிங் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார் என தெரிகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் கத்ரீனா கைஃபை திருமணம் செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கத்ரீனாவுடன் சேர்ந்திருப்பது போல புகைப்படங்களை எடிட் செய்தும் பதிவிட்டு வந்திருக்கிறார். கத்ரீனா உள்ளிட்ட பல நடிகைகள் புகைப்படங்களை அவர் எடிட் செய்திருந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் கத்ரீனாவை பின்தொடர்ந்திருக்கிறார். சமீபத்தில் கத்ரீனாவின் வீடு பக்கத்திலேயே ஒரு இடத்துக்கு குடியேறியும் இருக்கிறார். பின் கத்ரீனாவையும் அவரது கணவரையும் தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்மீது கத்ரீனாவின் கணவர் விக்கி கவுசல் புகாரளித்துள்ளார். புகார் அளிக்கப்பட்டு ஐந்து மணி நேரத்தில் மன்வீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என சொல்லப்பட்டுள்ளது.