கோவா முதலமைச்சராக, மனோகர் பாரிக்கர் இன்று பதவியேற்க உள்ளார்.
கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17, பாஜக 13 இடங்களைக் கைப்பற்றின. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டன.
இதனையடுத்து, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு பா.ஜ.கவுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஆளுநரைச் சந்தித்தார் மனோகர் பாரிக்கர்.
ஆளுநர் மிருதுளா, ஆட்சியமைக்க பாரிக்கருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, கோவா மாநில முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு மனோகர் பாரிக்கர் பதவியேற்கிறார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, பாரிக்கருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.