இனி அரசியல் கலந்துரையாடல் மூலமாகவே மணிப்பூரின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்று ஓய்வுபெற்ற லெஃப்டினென்ட் ஜெனரல் கொன்சாம் ஹிமாலய் சிங் தெரிவித்துள்ளார்.
2023 மே மாதத்திலிருந்து மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகத்தினரிடையே வன்முறை மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. வன்முறையைத் தடுத்து மணிப்பூரில் அமைதியையும் ஒற்றுமையையும் மீட்பதற்கான குழுவின் உறுப்பினரான கொன்சாம் ஹிமாலய் சிங், மணிப்பூரின் தொளபல் மாவட்டத்தில் பிறந்தவர். வடகிழக்குப் பிராந்தியத்திலிருந்து இந்திய ராணுவத்தில் லெஃப்டினென்ட் ஜெனரல் அந்தஸ்துக்கு உயர்ந்த முதல் நபர் என்கிற பெருமைக்குரியவர்.
கொல்கத்தாவில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய அவர், மணிப்பூர் பிரச்னைக்கு ராணுவரீதியான நடவடிக்கைகள் தீர்வளிக்கத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளார். மணிப்பூரில் 187 பழங்குடி இனங்களும், 242 மொழிகளைப் பேசுவோரும் வாழ்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசியல் ரீதியான கலந்துரையாடலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுமே மணிப்பூரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்றார்.