மொய்ராங் நகரிலுள்ள திரொங்லாபி அவாங் லெய்காய் கிராமத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் வீடு ஒன்றில் வெடிகுண்டை வீசியதில், 5 வயது சிறுவனும் ஆறு மாத பெண் குழந்தையும் உயிரிழந்தன
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்னும் சொற்றொடர் இன்றுவரை மணிப்பூருக்குப் பொருந்திப் போகிறது என்று சொன்னால், அது மிகையாகாது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். வன்முறை ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பமால் இருந்துவந்தது.
இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்து, அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பாஜக அரசு பதவியேற்றது. எனினும், மணிப்பூரில் இன்று வரை வன்முறை வெடித்து வருகிறது.
மொய்ராங் நகரிலுள்ள திரொங்லாபி அவாங் லெய்காய் கிராமத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் வீடு ஒன்றில் வெடிகுண்டை வீசியதில், 5 வயது சிறுவனும் ஆறு மாத பெண் குழந்தையும் உயிரிழந்தன. அவர்களது தாய் காயமடைந்தார். இந்தச் சம்பவம் வன்முறையாக மாற, உள்ளூர்வாசிகள் ஒரு பெட்ரோல் நிலையம் அருகே இரண்டு எண்ணெய் டேங்கர்களுக்கும் ஒரு லாரிக்கும் தீ வைத்தனர். தற்காலிக காவல் சாவடியைச் சேதப்படுத்தினர். வன்முறையைக் கட்டுப்படுத்த, பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டன. அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறையாளர்களை விரட்டினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 19 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், அப்பகுதியில் நிலவி வந்த அமைதியைச் சீர்குலைத்து, பள்ளத்தாக்கு மாவட்டங்கள் முழுவதும் பதற்றத்தை மீண்டும் தூண்டியுள்ளது. இதையடுத்து, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் மற்றும் பொய் வதந்திகளின் பரவலைக் கட்டுப்படுத்தவும், பொது அமைதியைக் குலைக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் செயலை, மனிதகுலத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் எனக் கண்டித்துள்ள மாநில முதல்வர் ஒய்.கேம்சந்த் சிங், “இதற்குக் காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என எச்சரித்துள்ளார்.