தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வந்தாலும், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் காங்கிரஸே தலைமையேற்று வந்தது. மேலும், தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும், திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் கூட்டணி வைத்துள்ளன.
இந்த நிலையில் தான், புதுச்சேரி மாநிலத்தில் 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக தலைமையிலே கூட்டணி அமைய வேண்டும் என திமுக தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் காங்கிரசுக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி என்ற கருத்து அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிப்ரவரி 3 ஆம் தேதி திமுக எம்.பியும், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளருமான ஜெகத்ரட்சகன், விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் திமுகவின் தலைமையையே ஆதரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைக்கப்படவில்லை என அம்மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். ஏற்கெனவே, தமிழ்நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் என காங்கிரஸ் கேட்டு வரும் நிலையில், அதனை திமுக திட்டவட்டமாக மறுத்துவருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகளியே முரண்பாடு அதிகரித்து வருகிறது. இந்தப்பிரச்சனை குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் எழுப்பியுள்ள கேள்விகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அந்தப் பதிவில், 2014 லோக்சபா தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டி, கூட்டணியில் எந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ளது என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். அதன்படி, "கூட்டணியில் 8 சதவீதம் வாக்கு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா அல்லது 26 சதவீதம் உள்ள கட்சி தலைமை தாங்குமா? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இழிவாக பேசப்பட வேண்டும்? தொடரும் இந்த முறை, நல்லது அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வருகிற சட்டமன்றத் தேர்தல்களில் அதிக வாக்கு வங்கியைக் கொண்ட காங்கிரஸ் கட்சியைவிட, குறைந்த வாக்கு வங்கியைக் கொண்ட தி.மு.க கூட்டணியில் தலைமை வகிக்க முயற்சிப்பதாக மறைமுகமாக அவர் சாடியுள்ளார். தொடர்ந்து, இந்தப் போக்கு தொடர்வது நல்லதல்ல என்றும் அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் ஏற்கெனவே வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில், புதுச்சேரியில் கூட்டணி தலைமை குறித்து மாணிக்கம் தாகூரின் கருத்து, புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் 12 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 18 வாக்கு சதவீதத்தை கொண்டிருந்தது எனவும், காங்கிரஸ் 15 சதவீத வாக்கு சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.