இந்தியா

சபரிமலையில் மண்டல பூஜை - தங்க அங்கியுடன் ஐயப்பனை தரிசிக்க குவியும் பக்தர்கள்

கலிலுல்லா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை விமரிசையாக நடைபெறவுள்ளது. இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தற்போது நாளொன்றுக்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சபரிமலை மீண்டும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு சார்த்தப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டு தமிழகம் வழியாக நேற்று பம்பை சென்றடைந்தது.

பின்னர் தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட, தங்க அங்கியை சபரிமலை தந்திரியும், மேல்சாந்தியும் வரவேற்று ஐயப்பனுக்கு சார்த்தி மகாதீபாராதனை நடத்தினர். அப்போது பக்தர்கள் எழுப்பிய சரணகோஷம் சபரிமலை முழுவதும் எதிரொலித்தது.

41 நாள் மண்டல விரதம் இன்றுடன் நிறைவுபெறுவதை அடுத்து, ஐயப்பனுக்கு நண்பகல் 11.50 மணியில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குள் மண்டல பூஜை நடத்தப்படுகிறது. அதன் பின் இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. தொடர்ந்து மகர விளக்கு பூஜைகளுக்காக மீண்டும் டிசம்பர் 30 ஆம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படவுள்ளது. முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.