இந்தியா

பாட்டிலில் வைத்து பட்டாசு வெடித்த சிறுவர்கள் - தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

Sinekadhara

மும்பையில் கண்ணாடி பாட்டிலுக்குள் வைத்து பட்டாசு வெடித்த சிறுவனை தட்டிக்கேட்ட இளைஞரை மூன்று சிறுவர்கள் சேர்ந்து கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மும்பையில் உள்ள புறநகர் பகுதியான கோவண்டியின் சிவாஜி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 12 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு கண்ணாடி பாட்டிலில் பட்டாசை வைத்து அதை பாட்டிலுடன் வெடிக்கவைக்க முயற்சித்துள்ளான். அப்போது அதை பார்த்த 28 வயது இளைஞர் ஒருவர் சிறுவனை தடுத்து, அப்படி செய்யக்கூடாது என கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே சண்டை எழுந்துள்ளது. அப்போது மற்ற சிறுவர்கள் இருவரும் இளைஞரை அடித்து தாக்கியுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த 12 வயது சிறுவன் இளைஞரின் கழுத்தில் கூரிய ஆயுதத்தைக் கொண்டு குத்தி தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இளைஞரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கொண்டுவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த குற்றச்செயலுக்கு உறுதுணையாக இருந்த 14 வயது மற்றும் 15 வயது சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், குற்றம் புரிந்துவிட்டு தலைமறைவான மற்றுமொரு சிறுவனை போலீசார் தேடிவருகின்றனர்.