இந்தியா

திருப்பூர்: மதுபோதையில் தகராறு.. அந்தரங்க உறுப்பு அறுபட்ட நிலையில் கிடந்த மேஸ்திரி!

Sinekadhara

திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே அரசு பேருந்தில் தன்னுடன் தகராறில் ஈடுபட்ட கட்டட மேஸ்திரியின் அந்தரங்க உறுப்பை துண்டித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். படுகாயமடைந்த கட்டட மேஸ்திரி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்(35). இவர் கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் (15 வேலம்பாளையம்) தங்கி அப்பகுதியில் கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூரிலிருந்து அரசு பஸ்ஸில் ஏறி பயணம் செய்துள்ளார். இவர் அருகில் மற்ற நபரும் அமர்ந்து பயணம் செய்துள்ளார். பஸ்ஸில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கொடுவாய் அருகே நள்ளிரவில் பேருந்தை நிறுத்தி நடத்துனரால் இருவரும் கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர். அருண் லேசான மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய அருணுக்கும் மற்றொரு நபருக்கும் தகராறு  நடந்ததாகத் தெரிகிறது. இதில் கொடுவாய் அருகே ஒரு பேக்கரி அருகில் அருணின் ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் இன்று காலை ஊதியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் அருணிடமிருந்து செல்போன் மற்றும் நான்காயிரம் ரூபாயை மர்ம நபர் பறித்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.