ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் வீரர்களை ஏலம் விடுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு டெல்லி நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.
ஐபில் தொடரில் வீரர்கள் ஏலம் விடுவது மனிதர்களை விலைக்கு விற்கும் கடத்தலுக்கு வழிவகுப்பதால் அதற்கு தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். வீரர்களை விற்கும் இந்த நடைமுறை ஊழல், நெபோடிஸம் ஆகியவற்றிற்கும் வித்திடும் என அவர் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு, டி.என்.படேல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இல்லையென கூறி தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த மனுவைத் தாக்கல் செய்ததற்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், இது பொதுநல வழக்கு அல்ல, விளம்பரத்திற்காக தொடரப்பட்டது என நீதிபதிகள் சாடினர். அத்துடன், ஐபிஎல் அணிகள் தங்களுடைய சொந்த கௌரவத்திற்காக விளையாடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.