இந்தியா

உடலுறவின்போது மாரடைப்பால் இளைஞர் மரணம்.. இதய நோயை தடுக்க என்ன வழி?

JananiGovindhan

காதலியுடன் உடலுறவில் இருந்த நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பகீர் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியிருக்கிறது.

நாக்பூர் பகுதியைச் சேர்ந்த அஜய் பர்தேகியின் (28), காதலி (23) மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இருவரும் ஃபேஸ்புக் மூலம் நட்பாக பழக தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் கடந்த ஞாயிறன்று (ஜூலை 3) நாக்பூரின் சனோர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு மாலை 4 மணியளவில் விடுதிக்கு சென்ற இருவரும் தனிமையில் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் உள்ளே சென்ற அரை மணிநேரத்திலேயெ திடீரென காதலன் அஜய் மயங்கி விழுந்ததால், அப்பெண் பதறியபடி வெளியே வந்து விடுதி ஊழியரிடம் அஜய்யின் நிலையை கூற, அவரை உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அங்கு மருத்துவர்கள் அஜய் பர்தேகியை பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இதனிடையே போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி, அஜய்யின் காதலியை விசாரித்ததில், உடலுறவும் கொள்ளும்போது அவர் திடீரென மயங்கி விழுந்துவிட்டார் எனவும், அவர்களது காதலுக்கு இருதரப்பும் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்ததாகவும் கூறியுள்ளார்.

டிரைவராகவும், வெல்டிங் டெக்னீசியனாகவும் இருந்த அஜய்க்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அஜய் எந்த சிகிச்சையிலும் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ள சனோர் போலீசார், அவரது இறப்பு திடீர் மாரடைப்பாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுவது அரிதானது அல்ல என்று இருதயநோய் நிபுணரான மருத்துவர் ஆனந்த் சஞ்சேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ரத்தக்குழாய் சார்ந்த தமனி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாத போது, உடலுறவு போன்ற கடுமையான நடவடிக்கைகளின்போது மரணம் நிகழலாம் என்று டாக்டர் சஞ்சேதி தெரிவித்துள்ளார்.

ஏனெனில், உடலுறவு கொள்ளும்போதும் சரி, மற்ற கடுமையான பணிகளில் ஈடுபடும்போதும் சரி, இதயத்திற்கு அதிக அளவு இரத்தமும் ஆக்ஸிஜனும் தேவைப்படுகிறது. அப்போது அதன் தேவை பூர்த்தி செய்யப்படாவிடில், மோசமான விளைவுகளும் சில நேரங்களில் மரணமும் நிகழும் என கூறியுள்ளார்.

இதுபோன்ற விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க, வழக்கமான வாழ்க்கை முறையை மாற்றி முறையாக உண்டு, தூங்கி, பணியாற்றி, உடற் பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமாக தினசரி வாழ்க்கையை கடத்துவதால் இதுபோன்ற பாதிப்புகள் வராது என்பதை விட, வந்தால் சரிசெய்ய உதவும் என நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.