video image x page
இந்தியா

மரித்துப்போன மனசாட்சி.. உயிரை நிறுத்திக்கொண்ட அப்பா.. மகள்கள் செய்த கொடூர சம்பவம்!

மகள்கள் உயர்ந்த பொறுப்பில் இருந்தும் தந்தையின் இறுதிச் சடங்கிற்கு வராமல், அவரது உடல் அனாதையாக அடக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், அதை காணொளி மூலம் கண்டுகளித்த காட்சிகள் இந்தியர்களிடம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைப் பூர்வீகமாகக் கொண்டவர் சிவசரண் ராம் ரத்தன் குப்தா. இவருக்கு மூன்று மகள்கள். ஜவுளி வியாபாரம் செய்து தனது மூன்று மகள்களையும் நன்கு படிக்கவைத்தார். இதில், இரண்டு மகள்கள் ஆசிரியையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மூவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசிக்கின்றனர். மூத்த மகள் அனிதா நேபாளத்திலும், நிஷா உத்தரப் பிரதேசத்திலும், இளைய மகளான பிரியா மும்பையிலும் வசிக்கின்றனர். இந்த நிலையில், தனது முதுமை காரணமாக சிவசரண் ராம் ரத்தன் குப்தா தனது மனைவியுடன் ஹரியானா மாநிலம் சோனிபட்டு மேற்கு ராம் நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கடந்த ஒன்றரை வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். இதில் அவரது மனைவி ஏற்கெனவே காலமாகிவிட்டார்.

இந்தச் சூழலில், ரத்தன் குப்தா நலத்துடன் இருந்தபோது, அவரது மகள்கள் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளனர். ஆனால், அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு அவருடன் பேசுவதை மகள்கள் குறைத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அவர், கடந்த ஜூலை 4ஆம் தேதி காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, முதியோர் இல்ல நிர்வாகம் அவரது மூன்று மகள்களைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் யாரும் குப்தாவின் இறுதிச்சடங்கிற்குச் செல்லவில்லை. இதையடுத்து, முதியோர் இல்ல நிர்வாகம் மற்றும் உள்ளூர் சமூக உறுப்பினர்களின் உதவியுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், தந்தையின் இறுதிச்சடங்கிற்கு வராத அவரது மகள்கள், அதை காணொளிக் காட்சி மூலம் பார்த்துள்ளனர். நேபாளத்தில் ஆசிரியையாக வசித்து வரும் அவரது மூத்த மகள் தனது தந்தையின் இறுதிச் சடங்குகள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று கோரி ஆன்லைனில் ரூ. 5,100 அனுப்பியுள்ளார். தவிர, அந்தச் சடங்கு காணொளியை தனக்கு அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மகள்கள் இருந்தும் தந்தையின் உடல் அனாதையாக அடக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.