இந்தியா

ம.பி: பைக் சாவி தர மறுத்த மகனின் கையை துண்டாக வெட்டி கொலை செய்த தந்தை!

JustinDurai

பைக் சாவியை தர மறுத்த மகனின் கையை துண்டாக வெட்டியுள்ளார் அவரின் தந்தை.

மத்தியப் பிரதேசம் மாநிலம் தாமோ மாவட்டத்தைச் சேர்ந்த மோட்டி படேல் (51) என்பவர் தனது இளைய மகன் சந்தோஷ் படேலிடம் (21) பைக்கின் சாவியை கேட்டுள்ளார். ஆனால் சந்தோஷ் சாவியை கொடுக்க மறுத்ததால் கோபமடைந்த தந்தை மோட்டி படேல், தனது மூத்த மகனான ராம் கிஷனுடன் (24) சேர்ந்து சந்தோஷை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஆத்திரத்தில் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து சந்தோஷின் இடது கையை வெட்டியுள்ளார் மோட்டி. அதன்பின்னர் வெட்டப்பட்ட கை மற்றும் கோடரியுடன் மோட்டி, காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனிடையே படுகாயமடைந்த சந்தோஷை அவரது மனைவி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டி படேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது மூத்த மகன் ராம் கிஷனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தோஷின் கொலைக்கு வேறு காரணமா என்ற கோணத்திலும்  போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிக்க: உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பெண் குழந்தை; பிஞ்சுக்கைகளால் அடையாளம் காணப்பட்ட அவலம்