உணவில் எலி
உணவில் எலி ட்விட்டர்
இந்தியா

ஆன்லைன் உணவில் இறந்துகிடந்த எலி: 75 மணிநேரம் பாதிக்கப்பட்ட நபர்.. இறுதியில் உணவகம் வைத்த ட்விஸ்ட்!

Prakash J

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் ராஜீவ் சுக்லா. இவர், கடந்த 8-ஆம் தேதி மும்பைக்கு வந்துள்ளார். அன்று இரவு அங்கு ஒரு உணவகத்தில் சைவ சாப்பாடு ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். உணவு வந்தபிற்கு, அதை எடுத்துச் சாப்பிடத் தொடங்கியபோது அதன் சுவை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து அதை சோதனையிட்டுள்ளார்.

அப்போது அதில், எலி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், அந்த உணவை ஏற்கெனவே சாப்பிட்டதால் அவருக்கு உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார். குறிப்பாக, மருத்துவமனையில் மட்டும், அவர் 75 மணி நேரம் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக மும்பை நாக்பாடா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தும் இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட ராஜீவ் சுக்லா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன், அவர் ஆர்டர் செய்த உணவில் இருந்த இறந்த எலியின் படங்கள், அவரின் மருத்துவச் செலவிற்கான ரசீது மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றையும் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தச் செய்தி இணையத்தில் வைரலான நிலையில், சுக்லாவின் பதிவிற்கு உணவகம் பதிலளித்துள்ளது. இதுகுறித்து அந்த உணவகம் (Barbeque Nation) அளித்துள்ள எக்ஸ் பதிவில், "வணக்கம் ராஜீவ். நீங்கள் அனுபவித்த சிரமத்திற்கு வருந்துகிறோம். மும்பையில் உள்ள அலுவலகத்தைச் சார்ந்த பரேஷ், உங்களின் நிலைமையின் விவரங்களைப் புரிந்துகொண்டு, ஒரு தீர்வை நோக்கிச் செயல்பட உங்களுடன் தொடர்பில் இருப்பார். உங்கள் தேவையை விரைவாக நிவர்த்திசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளது.