இந்தியா

மரத்தில் மயங்கினார் மாங்காய் பறிக்கச் சென்ற இளைஞர்: போராடி மீட்பு

webteam

மாங்காய் பற்றிச் சென்ற இளைஞர், 75 அடி உயர மரத்தில் திடீரென மயங்கினார். அவரை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது நிலம்பூர். இதன் அருகிலுள்ள சுங்கதாராவைச் சேர்ந்தவர் அனூப் (31). இவர் வீட்டின் அருகில் உள்ள உயர்ந்த மரத்தில் மாங்காய்கள் கொத்து கொத்தாகத் தொங்கிக்கொண்டிருந்தன. இவருக்கு அதைப் பறித்து சாப்பிட ஆசை. ஆசையை தீர்க்க உடனடியாக, மரத்தில் ஏறினார்.

உயரத்தில் சென்றதும் கீழே பார்த்தார். அதிக உயரத்தில் ஏறிவிட்டதாக நினைத்த அவருக்குத் திடீரென்று தலை சுற்றியது. பின் மரத்தில் அப்படியே மயங்கிவிட்டார். அவர் ஏறியது 75 அடி உயரம்!

இதை கீழிருந்த கவனித்த பக்கத்து வீட்டுக்காரர், ‘ஐயையோ, விழுந்தால் இறந்துவிடுவாரே’ என நினைத்தார். என்ன செய்யலாம் என யோசித்தவர், மடமடவென மரத்தில் ஏறினார். மயங்கிக் கிடந்த அனூப்பை அப்படியே மரத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டினார். பின்னர் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக பெரிய ஏணி மூலம் மரத்தில் ஏறினர். பின்னர் அவரை பத்திரமாக கயிற்றில் கட்டி தரைக்கு கொண்டு வந்தனர். அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். பின்னர் அவர் மயக்கம் தெளிந்தார்.

’’சமயோசிதமாகச் செயல்பட்டதால் ஒருவர் உயிர் காப்பாற்றப்பட்டது. அந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என்றனர், தீயணைப்புத் துறையினர்.