இந்தியா

5 வருடங்களாக பிரிந்து வாழும் மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரச் செயல்!

Sinekadhara

கேரளாவில் தன்னிடமிருந்து பிரிந்துவாழும் மனைவியின் கைகளை வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எழாம்குளம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் வித்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியிருக்கிறது. ஓராண்டு மட்டுமே சேர்ந்துவாழ்ந்த இருவருக்கிமிடையே பல்வேறு சண்டை சச்சரவுகள் ஏற்படவே வித்யா கடந்த 5 வருடங்களாக தனது தந்தையின் வீட்டில் வசித்துவருகிறார். மேலும், இருவரும் விவாகரத்துக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வித்யாவில் வீட்டிற்குள் புகுந்த சந்தோஷ், வித்யாவை அடித்து தாக்கியதுடன், தான் கொண்டுவந்த பட்டாகத்தியால் வித்யாவின் ஒரு கையை மணிக்கட்டு வரையும், மற்றொரு கையை முழங்கை வரையும் துண்டாக வெட்டியுள்ளார்.

மேலும், முடியையும் வெட்டியதாகத் தெரிகிறது. தவிர, தலையிலும் காயங்களை ஏற்படுத்தியுள்ளார். தனது மகளை காப்பாற்ற முயன்ற வித்யாவின் தந்தை விஜயனையும் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார் சந்தோஷ். தற்போது வித்யா மற்றும் அவரது தந்தை இருவரும் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே சந்தோஷை வித்யாவின் வீட்டிற்கு அருகில் பார்த்ததாக பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து சந்தோஷ் இந்த தாக்குதலை திட்டமிட்டு செய்தது தெரியவந்துள்ளது. சந்தோஷின் போன் நம்பரை வைத்து பல்வேறு காவல்நிலையங்களின் உதவியுடன் அவரை கைது செய்துள்ளனர்.