இந்தியா

சிறுவனை கொலை செய்தவரை உயிருடன் எரித்துக் கொன்ற உள்ளூர் மக்கள்

webteam

அஸ்ஸாம் மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்த நபரை உள்ளூர்வாசிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது

அஸ்ஸாம் மாநிலம் திப்ருஹர் மாவட்டத்தில் தோலஜன் தேயிலைத் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு உஜ்ஜல் முரா என்ற 5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சுனித் நந்தி என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு சென்று சிறுவன் விளையாடியுள்ளான். திடீரென ஆத்திரமடைந்த சுனித், சிறுவனை தாக்கத் துவங்கியுள்ளார். மூர்க்கத்தனமாக தாக்கிய பின், சிறுவனை கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுனித் வீட்டிற்கு சென்றுள்ளனர். அனைவரும் சேர்ந்து அவரைத் தாக்கத் துவங்கியுள்ளனர். ஆத்திரத்தில் அவரை உயிருடன் தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர். சுனித் எரிந்து உயிரை விட்ட பின் சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சுனித் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக இன்னும் ஒருவரைக் கூட காவல்துறை கைது செய்யவில்லை.