ஒருவர் தனது மனைவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அனுமதியின்றி பதிவு ஏற்றியதற்காக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. எனினும் இவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தற்போது இருவரும் விவகாரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் இவரது கணவர் வேறு ஒருவரின் சமூக வலைத்தள கணக்கிலிருந்து மனைவியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதவியேற்றியுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் பெண் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில், “என்னுடைய கணவர் என் அனுமதி இன்றி என்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதுவும் அவர், வேறு ஒருவரின் கணக்கிலிருந்து என் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் எனக்கு கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளார்” என அப்பெண் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள், புகாரில் முகாந்திரம் உள்ளது எனக் கூறி மனேசர் காவல் நிலையத்திற்கு புகாரை அனுப்பினர். இதனையடுத்து மனேசர் காவல் நிலையத்தில் இந்தப் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் புகைப்படங்களை யார் பதிவு ஏற்றியது என்பது தொடர்பாக மனேசர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.