இந்தியா

மனைவிக்கு முத்தம் கொடுத்ததால் இளைஞருக்கு சரமாரி அடி - ஏன் தெரியுமா?

ஜா. ஜாக்சன் சிங்

தனது மனைவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சராயு நதி ஓடுகிறது. கங்கை நதியின் கிளை ஆறான சராயுவை, இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். இந்நிலையில், நேற்று ஒரு இளைஞர் சராயு நதியில் தனது மனைவியுடன் குளித்துக் கொண்டிருந்தார். இருவரும் பேசிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில், அந்த இளைஞர் தனது மனைவியை நெருங்கி சென்று முத்தம் கொடுக்க தொடங்கினார். இதனைக் கண்ட அங்கிருந்த ஒருவர், அந்த இளைஞரை தரதரவென இழுத்துச் சென்று கன்னத்தில் அறைந்தார். திடீரென அடி விழுந்ததால் அந்த இளைஞர் சற்று நிலைத்தடுமாறினார்.

அவர் சுதாரிப்பதற்குள்ளாக, அவரை 10-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனை பார்த்த அவரது மனைவி, கணவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பின்னர் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்து அந்த இளைஞரை மீட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாங்கள் புனிதமாக கருதும் சராயு நதியில், ஆபாசமாக நடந்து கொண்டதால் அந்த இளைஞரை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.