காசோலை மோசடி தொடர்பான வழக்கு ஒன்றை குஜராத் நீதிமன்றம் விசாரித்து வந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி நிர்சார் எஸ். தேசாய் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், புகார்தாரர் சமத் பேட்டரி வர்ச்சுவல் முறையில் நீதிமன்றத்தில் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தார். கடந்த ஜூன் 20-ம் தேதி நடைபெற்ற இந்த ஆன்லைன் விசாரணையில், சமத் என்ற அந்த நபர், கழிவறையில் அமர்ந்து கொண்டே, நீதிமன்றத்தில் ஆன்லை வழியாக ஆஜரானாது காண்போரை அதிர்ச்சியடை வைத்துள்ளது.
சுமார் ஒரு நிமிடம் நீளமுள்ள அந்த குறுகிய காணொளியில் அந்த நபர் கழிப்பறையில் அமர்ந்தபடி ஹெட்செட் அணிந்துகொண்டு, தனது செல்போனை தரையில் வைத்து, நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதைக் காண முடிகிறது.
அதே நேரத்தில் நீதிமன்ற அறையில் வழக்கறிஞர் தனது சட்ட வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு, பொதுமக்கள் மற்றும் சட்ட வல்லுநர்களிடையே கடும் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் இப்படி இருந்ததை நீதிபதி கண்டாரா? இல்லையா என்பது குறித்து தெரியவில்லை.
இதனையடுத்து, கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்கு பிறகு நீதிபதி தேசாய் அந்த நபரின் பெயரை கேட்க, தனது பெயர் சமத் என்றும், சூரத்தின் கிம் கிராமத்தில் வசிப்பதாகவும் , இந்த வழக்கில் புகார் அளித்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், அதன் கண்ணியத்தை பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பலரும் தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.