உத்தரப்பிரதேசம் - ரீல்ஸூக்காக தெருநாயை கொடுமைப்படுத்திய நபர்
உத்தரப்பிரதேசம் - ரீல்ஸூக்காக தெருநாயை கொடுமைப்படுத்திய நபர் முகநூல்
இந்தியா

ரீல்ஸ்காக தெருநாயை கொடுமைப்படுத்திய உத்தரப்பிரதேச இளைஞர்... கடும் எதிர்ப்புகளையடுத்து கைது!

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் ஷகுர்பூர் என்ற பகுதியில் ஜாபர் என்னும் இளைஞர் செய்த ஒரு செயல்தான், இன்று இணையவாசிகள் பலரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாபர் என்னும் இந்த இளைஞர், இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட வேண்டும் என்பதற்காக தெருநாய் ஒன்றின் ஒரு காலை மட்டும் பிடித்துக்கொண்டு, அதனை தலைகீழாக சுற்றியுள்ளார். வேகமாக நெருப்பு உள்ள பகுதிக்கு அருகேவைத்து நாயை சுழற்றுகிறார் அந்நபர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில் நாய் அலறும் சத்தம் நம் காதுகளையும் துளைக்கிறது.

உத்தரப்பிரதேசம் - ரீல்ஸூக்காக தெருநாயை கொடுமைப்படுத்திய நபர்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தால் லைக்ஸ் அள்ளும் என்று நினைத்தார் போல...! நிதர்சனம் அவருக்கு கைதையே வழங்கியுள்ளது என்பது கொஞ்சம் ஆறுதல்.

“ரீல்ஸ் பதிவு செய்வதற்காக விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் இப்படியான கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாது. நாயும் ஒரு உயிருள்ள ஜீவன்தானே.... இதனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பான தன்னுடைய பதிவில் உத்தரப்பிரதேச காவல்துறையையும் இணைத்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார் பத்திரிகையாளர் லோகேஷ் என்பவர். அவரின் பதிவிற்கு கீழ் பதிலளித்துள்ள காவல்துறை, “இந்த விவகாரம் தொடர்பாக, போஜ்பூர் காவல் நிலையத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று விலங்குநல ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தினை பதிவு செய்துவருகின்றனர்.

தெருநாய்கள் துரத்தியும், கடித்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ஒருபுறம் உயிரிழந்து வரும் நிலையில், மற்றொரு புறம் என்னவோ இப்படி ரீல்ஸ் மோகத்திற்காக வாயில்லாத ஜீவனை வஞ்சிக்கும் மனிதர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு இதுவும் ஒரு சான்று!