இந்தியா

'தீய சக்தியை விரட்டுகிறேன்' - சிறுமிக்கு 6 மாதமாக பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன?

ச. முத்துகிருஷ்ணன்

மத்தியப் பிரதேசத்தில் தீய சக்திகளை வீட்டிலிருந்து விரட்டுவது போல் நடித்து சிறுமியை 6 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில் எலக்ட்ரானிக் கேஜெட்களை வியாபாரம் செய்து வந்தார் ஒருவர். அவரது மனைவி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். கொரோனா ஊரடங்கால் எலக்ட்ரானிக் கேஜெட் வணிகம் பெரிய அளவில் நஷ்டமடைந்தது . இதனால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளானார். அதே சேர்ந்தவர் 30 வயது பழ வியாபாரி நிஹால் பெக்கை அணுகி தீர்வு கேட்டுள்ளார். அவர் தான் ஒரு மந்திரவாதி என்று கூறி நஷ்டம் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு தீய ஆவி இருப்பதாகவும், அது தடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

குடும்பத்தினரும் அதை நம்பி வீட்டில் தீய சக்திகளை விரட்டும் சடங்குகளை நடத்தியுள்ளனர். கஅப்போது அவ்வீட்டில் இருந்த 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் வாரத்திற்கு இரண்டு முறை அந்த வீட்டிற்குச் சென்று பூஜைகளை செய்து வந்துள்ளார் . சடங்குகளின் போது குடும்ப உறுப்பினர்கள் தனித்தனி அறைகளில் தங்க வேண்டும் என்று கூறி அனைவரையும் நம்பவைத்து மீண்டும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உடலுறவு கொள்ள அனுமதிக்காவிட்டால், "ஆவி பெற்றோரைக் கொல்லக்கூடும்" என்று சிறுமியை பயமுறுத்தி தொடர்ந்து இக்கொடூரச் செயலை புரிந்து வந்துள்ளார்.

இறுதியாக தான் ஆவியை விரட்டியதாகவும், மீண்டும் வீட்டிற்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார். இதன்பின்னர் அந்த சிறுமி தைரியத்தை வரவழைத்து, தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி பெற்றோரிடம் கூற, அவர்கள் அதிர்ச்சியாகி காவல்துறையை அணுகினர். உடனடியாக நிஹாலை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம், 2012 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.